சிரங்கு (இம்பெடிகொ)

Impetigo [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பிள்ளைகளில் இந்தத் தோல் தொற்றுநோய்க்கான அறிகுறிகள், காரணங்கள், மற்றும் சிகிச்சைகள் பற்றி இலகுவாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கண்ணோட்டம்.

சிரங்கு (இம்பெடிகொ) என்றால் என்ன?

சிரங்கு என்பது பக்டீரியாவால் ஏற்படும் ஒரு தோல் தொற்றுநோயாகும். இது இலகுவாகப் பரவும். இது இளம் பிள்ளைகளில், விசேஷமாகக் குழந்தைகளில் மிகவும் பொதுவானது. சிகிச்சையில்லாமல் சிரங்கு பல மாதங்களுக்கு நீடிக்கும். அது இன்னுமதிக மோசமானதாக மாறக்கூடும்.

சிரங்குக்கான (இம்பெடிகொ) அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

சிரங்குக்கான அறிகுறிகள் காலப்போக்கில் பின்வருமாறு மாறும்:

  • முதலில், பிள்ளைகளில் சிகப்புப் பின்னணிகொண்ட சிறிய அல்லது பெரிய கொப்பளங்கள் தோன்றும். கொப்பளங்கள் சீழைக் கொண்டிருக்கும். அவை வாயைச் சுற்றி அல்லது மூக்கில் காணப்படும். அவை டயபர் அணியப்படும் பகுதியிலும் காணப்படலாம்.
  • பின்பு கொப்பளங்கள் வெடிக்கும். அவை ஒழுங்கற்ற புண்களாக மாறும். புண்கள் பெரிதாக வளரலாம்.
  • புண்ணின் மேற்பரப்பு உலரும். தேனின் நிறம் கொண்ட பொருக்குகள் புண்ணிலிருந்து தோன்றும்.
  • கொப்பளங்கள் வெடித்தபின்னர் புண்களில் அரிப்பெடுக்கும்.

காரணங்கள்

சிரங்கு பக்டீரியாவினால் ஏற்படுகிறது. பக்டீரியா, ஒரு வெட்டுக்காயம், திறந்த புண், பூச்சிக் கடி, அல்லது தோல் வெடிப்பினூடாக உடலினுள் உட்செல்லுகிறது. சிரங்கு பெரும்பாலும் ஸ்டெஃபிலொகொக்கஸ் ஓரியஸ் ஆல் ஏற்படுகிறது. இது ஸ்டாஃப் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. சிரங்கு ஸ்றேப்ற்றொகொக்கஸ் பையோஜினிஸினாலும் ஏற்படலாம். இது ஸ்றெப் தொற்றுநோய் என அழைக்கப்படும்.

உங்கள் பிள்ளைக்கு பின்வருவன இருந்தால் இந்தத் தொற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு:

  • உலர்ந்த அல்லது பொருக்குள்ள தோல்
  • எக்ஸிமா
  • எரி காயங்கள், கீறல்கள், பிளவுகள், வெட்டுக்காயங்கள், அல்லது உராய்வுகள்
  • வேறு தோல் தொற்றுநோய்கள்
  • சிலந்தி அல்லது பூச்சிக் கடி

உங்கள் பிள்ளையின் மருத்துவர் என்ன செய்யலாம்

உடல்ரீதியான பரிசோதனை

பெரும்பாலும், உங்கள் பிள்ளைக்கு சிரங்கு இருக்கிறதா என்பதை தோலைப் பார்த்தே மருத்துவர் கண்டுபிடிப்பார். மருத்துவர் இரத்தப் பரிசோதனை மற்றும் வேறு பரிசோதனைகளை சிபாரிசு செய்யலாம். பெரும்பாலும், இந்தப் பரிசோதனைகள் தேவைப்படாது.

அன்டிபையோடிக் மருந்துகள்

உங்கள் பிள்ளையின் மருத்துவர் ஒரு அன்டிபையோடிக் பூசு மருந்தை எழுதிக் கொடுக்கலாம். பூசு மருந்து, பக்டீரியாவுக்கு எதிராக நல்ல பலனைக் கொடுக்கும். இந்தப் பூசு மருந்தை, ஒரு நாளில் சில தடவைகள் புண்களின் மேல் தடவ வேண்டியிருக்கும்.

சிரங்கு ஒரு சில நாட்களின் பின்னர் நிவாரணமடையவேண்டும். ஆயினும், உங்கள் பிள்ளை நிவாரணமடைவதாக உணர்ந்தாலும், குறிப்பெழுதிக்கொடுக்கப்பட்ட அன்டிபையோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகித்துத் தீர்க்கும் வரை நிறுத்த வேண்டாம். இந்தத் தொற்றுநோய், விசேஷமாக முழுமையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை எனில், திரும்பவும் வரலாம்.

உங்கள் பிள்ளையின் சிரங்கு மோசமானதாக இருந்தால் அல்லது மோசமாகிக்கொண்டே போனால், அவனுக்கு ஒரு வாய் மூலமாக (ஓரல் அன்டிபையோடிக்) எடுத்துக்கொள்ளப்படும் அன்டிபையோடிக் மருந்து தேவைப்படலாம்.

உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்

திறந்திருக்கும் புண்கள் மீது பூசு மருந்தைத் தடவவும்

ஒரு சுத்தமான விரலை உபயோகித்து, திறந்திருக்கும் புண்கள் மீது பூசு மருந்தைத் தடவவும். இதை ஒரு நாளில் சில தடவைகள் செய்யவும். உப்பு நீர் அல்லது ஐதாக்கப்பட்ட வினாகிரியில் தோய்க்கப்பட்ட ஒரு பஞ்சினால் பொருக்குகள் அல்லது படைகளை மெதுவாக அகற்றவும்.

அன்டிபையோடிக் மருந்துகள் முழுவதையும் உபயோகிக்கவும்

மருந்துக் குறிபெழுதிக்கொடுத்த எல்லா வாய்வழி அன்டிபையோடிக் மருந்துகளையும் உபயோகிப்பதற்கு நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தவனாக உணர்ந்தாலும் இதை செய்யவும்.

சிரங்கு விரைவாகப் பரவும்

சிரங்கு ஒருவரிலிருந்து மற்றவருக்கு விரைவாகப் பரவும். தொற்றுநோயுள்ள ஒருவரின் திறந்த புண்ணைத் தொடுவதன் மூலம் தொற்றுநோய் பரவலாம். தொற்று நோய் முழுமையாக நிவாரணமடையும்வரை உங்கள் பிள்ளையை மற்றப் பிள்ளைகளிலிருந்து தள்ளி வைக்கவும். சிகிச்சை செய்யப்பட்டால், சிரங்கு 5 நாட்களுக்குள் நிவாரணமடைந்துவிடும்.

மருத்துவ உதவிக்காக எப்போது தொடர்பு கொள்ளவேண்டும்

உங்கள் பிள்ளை சிரங்குக்கான அறிகுறியைக் காண்பித்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவருடன் ஒரு மருத்துவ சந்திப்புத் திட்டத்தைப் பதிவு செய்யவும்.

பின்வரும் நிலைமைகளின் கீழ் உங்கள் மருத்துவரை மீண்டும் சந்திக்கவும்:

  • உங்கள் பிள்ளை அடிக்கடி வாந்தி எடுப்பதால், மருந்துக் குறிப்பு எழுதிக் கொடுத்த அன்டிபையோடிக் மருந்துகளை வாய் மூலமாக உட்கொள்ள முடியவில்லை
  • உங்கள் பிள்ளை அன்டிபையோடிக் பூசு மருந்து அல்லது வாய் வழி மருந்தின் மூலமாக முன்னேற்றத்தைக் காண்பிக்கவில்லை

முக்கிய குறிப்புகள்

  • சிரங்கு ஒரு தோல் தொற்றுநோய். இது பக்டீரியாவினால் ஏற்படுகிறது.
  • சிரங்கின் அறிகுறி, சிறிய அல்லது பெரிய கொப்பளங்களை உட்படுத்துகிறது. கொப்பளங்கள் ஒரு சிவப்புப் பின்னணியில் காணப்படுகிறது. அவை சீழினால் நிறைந்திருக்கும். அவை வாயைச் சுற்றி அல்லது மூக்குப் பகுதியில் ஏற்படும். அவை டயபர் அணியப்பட்டிருக்கும் பகுதியிலும் ஏற்படலாம்.
  • சிரங்கு பக்டீரியாவினால் ஏற்படுகிறது. பக்டீரியா ஒரு வெட்டுக்காயம் அல்லது வெடிப்புள்ள தோலுனூடாக உடலுக்குள் செல்கிறது.
  • பெரும்பாலும், தொற்று நோய்க்கு சிகிச்சை செய்வதற்கு ஒரு அன்டிபையோடிக் பூசு மருந்து போதுமானது.
  • சிரங்கு தொடுதலின் மூலம் இலகுவாகப் பரவுகிறது. தொற்றுநோய் முற்றாக நிவாரணமடையும் வரை உங்கள் பிள்ளையை மற்றப் பிள்ளைகளிலிருந்து தனியே பிரித்து வைக்கவும்.
Last updated: மார்ச் 05 2010