'தாய்' மற்றும் 'தாய்ப்பால்' என்ற சொற்கள் எங்கள் ஆவணங்கள் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன; தனிநபர்களும் குடும்பங்களும் விருப்பமான பிற சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் மற்றும் மதிக்கிறோம்.
பெரும்பாலான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தான் சரியான உணவு. கனடியக் குழந்தை மருத்துவ சங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களுக்குப் பிரத்தியேகமாகத் தாய்ப்பால் கொடுப்பதை வலுவாக ஆதரிக்கின்றன. உங்கள் குழந்தைக்கு இரண்டு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது வரை தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரலாம், அத்துடன் ஆறு மாதத்தில் தொடங்கித் திட உணவுகளைச் சேர்க்கலாம்.
உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் தாய்ப்பால் கொடுத்தல் ஏன் முக்கியமானது?
உங்கள் தாய்ப்பால் உங்கள் குழந்தைக்குத் தேவையான சரியான ஊட்டச்சத்தை சமநிலையாகக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் குழந்தை வளரும்போது அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இது மாற்றமடைகிறது. உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலினால் கிடைக்கும் சில நன்மைகள் பின்வருமாறு:
- தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கக்கூடிய நோயெதிர்ப்பிகளை வழங்குதல்
- மூளை, கண் மற்றும் குடல் வளர்ச்சிக்கான விருத்திக் காரணிகளை வழங்குதல்
- காது, மார்பு மற்றும் இரைப்பை நோய்த்தொற்றுகள் போன்ற நோய்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்
- ஒவ்வாமையைக் குறைத்தல்
- உடல் பருமன் மற்றும் அதிக எடையுள்ளவராகும் அபாயத்தைக் குறைத்தல்
- சில குழந்தைப் பருவப் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைத்தல்
- திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி (SIDS)அபாயத்தைக் குறைத்தல்
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பல நன்மைகள் உள்ளன. இந்த நன்மைகளில் சில பின்வருமாறு:
- தாய்ப்பால் கொடுக்கும் போது, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்தல்
- உங்கள் குழந்தையைக் கவனித்துக்கொள்வதில் நம்பிக்கையை வளர்த்தல்
- 2ம் வகை நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைத்தல்
- என்பு மென்மையடைதல் (osteoporosis) அபாயத்தைக் குறைத்தல்
- மார்பக மற்றும் கருப்பைப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைத்தல்
- இலவசமான, சௌகரியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் உங்கள் குழந்தைக்குப் பாலூட்டலாம்
உங்கள் குழந்தைக்கு எப்போது பாலூட்ட ஆரம்பிக்க வேண்டும்?
உங்கள் குழந்தை பிறந்த முதல் மணி நேரத்தில் அவருக்குப் பாலூட்ட த் தொடங்குங்கள். புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தை சுகமானதாக இருந்தால், பிரசவத்தில் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றால், முதற் தடவை பாலூட்டல் முடியும் வரை, அவரை ஒரு மணி நேரம் வரை உங்கள் உடலுடன் தொடுகையில் வைத்திருக்க வேண்டும். விரைவில், அவர்கள் ஆழ்ந்த தூக்கத்துக்குப் போய் விடக்கூடும். பொதுவாகச், சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர்கள் அடுத்த உணவுக்காக எழுந்திருப்பார்கள்.
உங்கள் குழந்தைக்கு எவ்வளவு தடவைகள் பாலூட்ட வேண்டும்?
புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தைக்கு 24 மணி நேரத்தில் சராசரியாக 8 முதல் 12 முறை தாய்ப்பால் ஊட்டலாம். குழந்தைகளுக்கு ஒன்று முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை தாய்ப்பால் கொடுப்பது இயல்பானது, 24 மணி நேரத்தில் சராசரியாக எட்டு முதல் 12 முறை வரை. உங்கள் குழந்தைக்குப் பாலூட்டுவது அடிக்கடி உங்கள் மார்பகங்களை அதிக பால் உற்பத்தி செய்யத் தூண்டுவதுடன் உங்கள் குழந்தை வளரவும் உதவுகிறது.
பாலூட்டுவதற்கான குறிப்புகள் எவை?
உங்கள் குழந்தையின் நடத்தையில் கவனம் செலுத்துவதன் மூலம், அவர்கள் பசியுடன் இருக்கும்போது உங்களுக்குச் சொல்லும் சைகைகளை நீங்கள் கவனிப்பீர்கள்.
ஆரம்பத்துச் சைகைகள் பின்வருமாறு:
- • தூக்கத்தின் போது கைகளால் அளைதல், விரைவான கண் அசைவுகள்
- • உறிஞ்சும் ஒலிகள், மென்மையான கூவல் அல்லது பெருமூச்சு
- • வாய் திறப்பு
- • வாய்க்குள் கை வைத்தல் அல்லது உறிஞ்சும்/நக்கும் இயக்கங்கள்
- சப்புக் கொட்டுதல் போன்று வாயசைத்தல் (rooting)
பிந்திவரும் சைகைகள் பின்வருமாறு:
- சிணுங்குதல் (fussiness)
- தூக்கத்திற்கு வழிவகுக்கும் சோர்வு
- அழுகை
உங்கள் குழந்தை விழிக்கும் போது அல்லது பசியின் அறிகுறிகளைக் காட்டும் போதெல்லாம், நீங்கள் அவரை உங்கள் மார்போடு அணைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இது தேவைக்கேற்பப் பாலூட்டுவது என்று அழைக்கப்படுகிறது. உங்கள் குழந்தை தூக்கத்திலிருந்து அசையத் தொடங்கும் போது மார்பகத்தில் வைக்க முயற்சிக்கவும். அமைதியாக இருக்கும் குழந்தைக்குப் பாலூட்டுவது எளிது. குழந்தை அழுதால், உங்கள் குழந்தையை அமைதிப்படுத்த நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள் உடலுடன் தொடுகையில் வைக்கப்படும்போது மிகவும் அமைதியாக இருப்பார்கள். அமைதியானதும், உங்கள் குழந்தைக்கு மீண்டும் பாலூட்ட முயற்சிக்கவும்.
எந்த மார்பகத்தின் மூலம் பாலூட்ட வேண்டும்
ஒவ்வொரு முறை பாலூட்டும் போதும் எந்த மார்பகத்திலிருந்து தொடங்குகிறீர்கள் என்பதைக் கருத்திற்கொண்டு மாற்றி மாற்றிக் கொடுக்கவும். உங்கள் குழந்தை நன்றாக உறிஞ்சி விழுங்கும் வரை முதல் மார்பகத்திலிருந்து பால் குடிக்க அனுமதிக்கவும். உங்கள் குழந்தை விழுங்காமல் மற்றும்/அல்லது தூங்கிவிட்டால், குழந்தையின் கன்னத்தை அல்லது உடலைத் தடவுவதன் மூலம் அல்லது குழந்தையை ஏப்பம் விட வைப்பதன் மூலம் தொடர்ந்து தாய்ப்பால் குடிக்குமாறு உங்கள் குழந்தையைத் தூண்டுங்கள். குழந்தை எழுந்துவிட்டால் இரண்டாவது மார்பகத்திலிருந்து பால் கொடுங்கள். உங்கள் குழந்தையை இரண்டு மார்பகங்களிலும் பாலூட்ட அனுமதிப்பது உங்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்ய உதவும். தாய்ப்பால் குடிப்பது அதிகரித்தவுடன், உங்கள் குழந்தை ஒவ்வொரு பாலூட்டலின் போதும் எப்போதும் இரண்டு மார்பகங்களில் இருந்தும் பால் குடிக்க மாட்டாது; மற்றும் ஒவ்வொரு முறையும் பால் குடிப்பதற்கான நேரம் குறைவாக இருக்கலாம்.
"பால் ஒழுகுதல்" என்றால் என்ன?
உங்கள் குழந்தையைப் பற்றி நினைக்கும்போது அல்லது அவர்கள் அழுவதைக் கேட்கும்போது உங்கள் மார்பகங்கள் உணர்ச்சி வசப்படுவதை அல்லது பால் கசிவதை நீங்கள் கவனிக்கலாம். இது பால் வெளியேற்ற மீள்பாய்தல் அல்லது ஒழுகுதல் என்று அழைக்கப்படுகிறது. எல்லாத் தாய்மார்களும் இந்த உணர்வுகளை உணர மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
தாய்ப்பால் ஊட்டுவதில் நம்பிக்கையடைய எவ்வளவு நேரம் ஆகலாம்?
நீங்களும் உங்கள் குழந்தையும் இந்தப் புதிய திறனை ஒன்றாகக் கற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் தாய்ப்பால் கொடுப்பது சீராக நடைபெறுவதற்கு நான்கு முதல் எட்டு வாரங்கள் ஆகலாம். உங்களுக்குப் பாலூட்டுவதில் சிரமங்கள் இருந்தால் அல்லது ஏதாவது கேள்விகள் அல்லது கரிசனைகள் இருந்தால் பாலூட்டுதல் குறித்த ஆலோசகரின் ஆதரவை ஆரம்பத்தில் நாடுங்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள்
தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் முயற்சிக்க விரும்பும் சில பயனுள்ள நிலைகள் இங்கே: குறுக்குத்-தொட்டில் நிலை, கால்பந்து நிலை, தொட்டில் நிலை மற்றும் பக்கவாட்டு நிலை.
குறுக்குத் தொட்டில் நிலை

இந்த நிலையில், உங்கள் குழந்தை முற்றிலும் அவர்களின் பக்கவாட்டில் படுத்துக் கொள்கிறது, வயிற்றுடன் வயிறு தொடுமாறு உங்களை நோக்குகிறது. நீங்கள் இடது மார்பகத்தில் தாய்ப்பால் கொடுக்கிறீர்கள் என்றால், உங்கள் வலது கையைப் பயன்படுத்திக் குழந்தையின் கழுத்து மற்றும் தோள்களை ஆதரவாகப் பிடித்துக் கொள்ளவும். முதன்முதலில் தாய்ப்பால் கொடுக்கக் கற்றுக்கொள்ளும்போது அல்லது உங்கள் குழந்தை சிறியதாக இருந்தால் இந்த நிலை நன்றாக வேலை செய்யும்.
கால்பந்து நிலை

இந்த நிலையில், உங்கள் குழந்தை அவரின் முதுகில் அல்லது பக்கவாட்டில் படுத்துக் கொள்கிறது மற்றும் உங்கள் மார்பகத்தின் அதே பக்கத்தில் கையால் ஆதரிக்கப்படுகிறது. மார்பகம் மற்றக் கையால் பிடித்துக் கொள்ளப்படுகிறது. நீங்கள் தாய்ப்பால் கொடுக்கக் கற்றுக்கொள்ளும்போது அல்லது உங்கள் குழந்தை சிறியதாக இருந்தால் கால்பந்து நிலை நன்றாக வேலை செய்யும். உங்களுக்குப் பெரிய மார்பகங்கள் இருந்தால் அல்லது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றிருந்து, உங்கள் அடிவயிற்றில் குழந்தையை வைக்க முடியாவிட்டால் இதுவும் ஒரு நல்ல நிலையாக இருக்கும். கால்பந்துப் பிடிப்பு நிலையானது, ஒரே நேரத்தில் இரட்டையர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கான எளிதான வழியாகும்.
தொட்டில் நிலை

தொட்டில் நிலையில், உங்கள் குழந்தையின் தலை உங்கள் மார்பகத்தின் அதே பக்கத்தில் உங்கள் கையில் தொட்டிலிடப்படுகிறது. உங்கள் குழந்தை உங்களை நோக்கி, வயிற்றுடன் வயிறு தொடுமாறு திரும்ப வேண்டும், இதனால் அவர்கள் உங்கள் மார்பகத்தை அடையத் தங்கள் தலையைத் திருப்ப வேண்டியதில்லை.
பக்கவாட்டில் படுத்த நிலை

பக்கவாட்டில் படுத்திருக்கும் நிலையில், நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் பக்கங்களில் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குழந்தையின் தலை உங்கள் மார்பக மட்டத்தில் இருக்க வேண்டும். நீங்கள் உட்கார மிகவும் வேதனையாக இருந்தால், பெரிய மார்பகங்களைக் கொண்டிருந்தால் அல்லது உங்களுக்கு சிசேரியன் செய்திருந்தால் இது ஒரு நல்ல நிலை.
பல்வேறு நிலைகள் உள்ளன. ஒரு நல்ல நிலை என்பது நீங்கள் வசதியாகக் காணும் ஒன்றாகும், மேலும் இது குழந்தை பாலை ஆழமாக உறிஞ்சவும் எளிதாக விழுங்கவும் அனுமதிக்கிறது.
பாலை உறிஞ்சிக் குடித்தல்
வெற்றிகரமான தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு பயனுள்ள, வசதியான உறிஞ்சிக் குடிக்கும் முறை மிகவும் முக்கியமானது. இது குழந்தைக்குப் போதுமான தாய்ப்பால் கிடைப்பதையும், தாய்ப்பால் கொடுப்பதில் வலி ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
சரியான முறையில் உறிஞ்சிக் குடித்தல்

உங்கள் குழந்தையை உங்களுக்கு விருப்பமான நிலையில் வைத்தவுடன், உங்கள் குழந்தையின் மூக்கு உங்கள் முலைக்காம்புக்கு எதிரே இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் தலையைப் பின்னால் சாய்த்து, அவரின் நாடிப்பக்கம் முதலில் மார்பகத்திற்கு வருமாறு மார்பகத்திற்கு அருகில் கொண்டு வாருங்கள்.

உங்கள் குழந்தை வாயைத் திறக்காவிட்டால், உங்கள் முலைக்காம்பின் நுனியால் உங்கள் குழந்தையின் உதட்டை லேசாகத் தடவவும். பொறுமையாக இருங்கள். மார்பகத்திற்குக் கிட்டக் கொண்டு வருவதற்கு முன் அகலமாக வாய் திறக்கக் (உங்கள் குழந்தை கொட்டாவி விடுவது போல) காத்திருங்கள்.

உங்கள் குழந்தை தனது வாயை அகலமாகத் திறக்கும்போது, உங்கள் முலைக்காம்பு அவர்களின் வாயின் மேலண்ணத்தை நோக்கியிருக்கும் வகையில் அவரை விரைவாக உங்கள் மார்பகத்தை நோக்கிக் கொண்டு வாருங்கள். உங்கள் குழந்தையின் நாடி மார்பகத்தில் அழுந்திய வண்ணம், அவரின் தலை சற்றுப் பின்னால் சாய்ந்திருக்க வேண்டும், பாலை உறிஞ்சும்போது, உங்கள் குழந்தையின் வாய் அகலமாகத் திறந்திருக்க வேண்டும், உதடுகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் குழந்தை உங்கள் மார்பகத்தின் மீது ஒட்டிக்கொள்ளும்போது உங்களுக்கு வலி ஏற்பட்டால், உங்கள் குழந்தையின் நாடியை உங்கள் விரலால் மெதுவாக அழுத்தி, அவர்கள் தொடர்ந்தும் வாயை மூடியிருக்கும் போதே அவர்களின் வாயை அகலமாகத் திறக்க முயற்சிக்கவும். இது வலியைக் குறைக்கவில்லை என்றால், உறிஞ்சலை நிறுத்த உங்கள் விரலை அவர்களின் வாயின் மூலையில் செருகுவதன் மூலம் குழந்தையை உறிஞ்சுவதிலிருந்து விலக்கலாம், பின்ன்ர் மீண்டும் பாலூட்ட முயற்சிக்கலாம்.
மேலதிகத் தகவல்களுக்குத் தயவுசெய்து, SickKids இணையத்தளத்தில் பாலூட்டும் நிலை மற்றும் உறிஞ்சுதல் பற்றிய எங்கள் வீடியோவைப் பார்க்கவும்: http://www.sickkids.ca/breastfeeding-program/videos/index.html.
உங்கள் குழந்தை போதியளவு தாய்ப்பால் பெற்றுக்கொள்வதை எப்படி அறிவது
அநேக தாய்ப்பால் கொடுக்கும் பெற்றோர், விசேடமாக முதல் சில வாரங்களில், தங்கள் குழந்தைக்குப் போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறதா என அங்கலாய்ப்பார்கள். புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தை அவரின் பிறப்பு எடையில் சிறிதளவை ஆரம்பத்தில் இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வாழ்க்கையின் இரண்டு வாரங்களுக்குள் அவர் பிறந்த எடைக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.
பின்வரும் நிலைமைகளின் போது உங்கள் குழந்தை போதியளவு தாய்ப்பால் பெற்றுக்கொள்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்:
- 24 மணி நேரத்தில் குறைந்தது 8 முறையாவது பாலூட்டினால்
- பாலை உறிஞ்சி விழுங்குவதை நீங்கள் பார்த்தால், அந்தச் சத்தம் கேட்டால்
- ஐந்தாவது நாளில், அவர் குறைந்தபட்சம் மூன்று கணிசமானளவு மஞ்சள் நிற மலம் கழிப்பதுடன், 24-மணி நேரத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட டயப்பர்களை நனைத்தால்
உங்கள் குழந்தை வளரும்போது பாலூட்டும் தடவைகள் மற்றும் மலம் கழிக்கும் தடவைகள் மாறக்கூடும்.
பல குழந்தைகள் தாய்ப்பால் கொடுத்து முடித்த சிறிது நேரத்திலேயே எழுந்து பசிக்குரிய சைகைகளைக் காண்பிப்பது இயல்பு. நல்ல எண்ணம் கொண்ட சில உறவினர்கள், உங்களுக்குப் போதுமானளவு பால் சுரக்கவில்லை என்ற தங்கள் கரிசனையை வெளிப்படுத்த, ஒரு சூப்பி அல்லது புட்டிப்பாலைப் பரிந்துரைக்கும் நேரம் இது. இது நிகழும்போது, குழந்தைக்கு மீண்டும் தாய்ப்பாலை ஊட்டுங்கள், இதனால் அவர் தனக்குத் தேவையான பாலைக் குடித்து முடிக்க முடியும். குழந்தையின் இந்த நடத்தையானது, வயது வந்த ஒருவர் இரவு உணவைச் சாப்பிட்டு, ஓய்வெடுத்துப், பின்னர் இனிப்புப் பண்டம் (dessert) சாப்பிடத் தயாராக இருப்பதைப் போன்றது.
உங்கள் குழந்தையின் பால் குடிக்கும் முறைகள் அல்லது உங்கள் பால் சுரப்புப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், தயவு செய்து பாலூட்டுதலில் உதவும் ஒரு ஆலோசகரின் உதவியை நாடவும்.
துரிதகதி வளர்ச்சி
உங்கள் குழந்தை அடிக்கடி பாலுண்ண விரும்பும் நாட்களை நீங்கள் அனுபவிக்கலாம். இது பொதுவாக 3 வாரங்கள், 6 வாரங்கள் மற்றும் 10 முதல் 12 வார வயதாக இருக்கும்போது நிகழ்கிறது. பாலூட்டும் முறையில் ஏற்படும் இந்த மாற்றம் திடீர் வளர்ச்சியுடன் தொடர்புடையது. இது உங்கள் குழந்தையின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் உடலிடம் அதிக பால் உற்பத்தி செய்யச் சொல்லும் வழியாகும். உங்கள் உடல் அதிக பால் சுரந்து பதிலளிக்கும் வரை, உங்கள் குழந்தை சுமார் 48 மணிநேரங்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் குடிக்கும், அதன் பிறகு உங்கள் பாலூட்டும் வழக்கம் பொதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.
இது சாதாரணமான பால் குடிக்கும் நடத்தை என்பதை நினைவில் கொள்ளுங்கள், இந்த நேரத்தில் மேலதிக supplement வழங்க வேண்டிய அவசியமில்லை; உங்கள் தாய்ப்பாலே போதுமானது. மேலதிகமாகப் புட்டிப்பாலை வழங்குவதன் மூலம் இந்தச் செயல்முறையில் குறுக்கீடு நடந்தால், உங்கள் வளர்ந்து வரும் குழந்தைக்குத் தேவைப்படும் அளவுக்கு உங்கள் பால் சுரப்பு அதிகரிக்காமல் போகலாம்.
குழந்தைக்குரிய மேலதிக வைட்டமின்கள்
வைட்டமின் D தவிர, உங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் கனிமங்களையும் தாய்ப்பால் வழங்குகிறது. நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, உங்கள் குழந்தைக்கு முதல் வருடத்திற்கு ஒரு நாளைக்கு 400 IU அல்லது அதற்கு மேற்பட்ட வைட்டமின் D கொடுக்குமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
மேலதிகமாகப் புட்டிப்பாலை வழங்குதல்
உங்கள் பால் சுரத்தலை அதிகரிப்பதற்குக் குழந்தை பிறந்த முதல் சில வாரங்கள் மிக முக்கியமானவையாகும். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைக்கு supplementஆக எந்தவிதமான புட்டிப்பாலையும் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். உங்கள் குழந்தையின் எடை தகுந்த முறையில் அதிகரிக்காவிட்டால், மேலதிக உதவிக்காக உங்கள் மருத்துவரை அல்லது பாலூட்டுதலில் உதவும் ஆலோசகரிடம் பேசுங்கள். தாய்ப்பால் நன்கு சுரந்த பிறகு நீங்கள் போத்தலில் பாலை வழங்க விரும்பினால், உங்கள் குழந்தை தொடர்ந்தும் உங்கள் பாலைப் பெறுவதற்கும், உங்கள் பால் சுரப்பைப் பாதுகாப்பதற்கும் நீங்கள் பம்ப் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு மருத்துவமனையில் இருக்கும் உங்கள் குழந்தைக்குரிய தாய்ப்பாலைப் பம்ப் செய்து வெளிக்கொணர்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
தாய்ப்பால் கொடுக்கும் போது மருந்துகளை எடுத்துக்கொள்ளல்
பெரும்பாலான மருந்துகள், தாய்ப்பால் கொடுக்கும் போது எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது மற்றும் தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு மிகக் குறைந்த அளவிலேயே அது கடத்தப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் ஒரு மருந்தை உட்கொள்ள வேண்டியிருந்தால், அது பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவர், பாலூட்டுதல் ஆலோசகர் அல்லது மருந்தாளரிடம் விசாரித்துப் பார்க்கவும். மேலதிக விபரங்களைப் பின்வரும் முகவரியிலும் காணலாம்தாயிடமிருந்து குழந்தைக்கு.
எந்த நேரத்திலாவது உங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டால், உங்கள் தாய்ப்பால் சுரப்பைப் பேணுவதற்காக உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதெல்லாம் உங்கள் மார்பகங்களைப் பம்ப் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் தாய்ப்பால் கொடுத்துவிட்டு வேலைக்குத் திரும்புகிறீர்களா?
நீங்கள் வேலைக்குத் திரும்புகிறீர்கள் என்றால், ஆரம்ப வாரங்களில் உங்கள் குழந்தைக்கு ஒரு மார்பகத்தில் பாலூட்டலாம் மற்றைய மார்பகத்தைப் பம்ப் செய்து, உங்கள் தாய்ப்பாலைச் சேகரித்து உறைய வைக்கலாம். நீங்கள் வேலைக்குத் திரும்பும்போது உங்கள் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கிடைப்பதைப், போத்தலில் அதனைக் கொடுக்கும் மாற்றுக் கவனிப்பாளருக்கு இது உறுதி செய்கிறது.