சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுத்தல்(CIC): பெண் பிள்ளைகளுக்கு படிப்படியான அறிவுரைகள்

Clean intermittent catheterization (CIC): Step-by-step instructions for girls [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

சிறுநீர்ப்பையை வெறுமையாக்க வடிகுழாய் உபயோகிக்கவேண்டிய பிள்ளைகளுக்கு அதைத் தாமாகவே செய்துகொள்ளக் கற்றுக்கொடுக்கலாம்.

சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுத்தல் அதாவது CIC என்றால் என்ன?

சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுத்தல் என்பது உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பையிலிருந்து ஒரு நாளில் பல முறைகள் சிறுநீரை வெளியேற்றச் செய்யவேண்டிய தொழில்நுட்பமாகும்.

CIC என்பது சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுத்தல் என்பதைக் குறிக்கிறது

  • சுத்தமாக: முடிந்தளவுக்கு கிருமிகளை அழிப்பது
  • இடைவெளியில்: ஒரு ஒழுங்கான அட்டவணையில், ஒரு நாளில் பல முறைகள் செய்தல்
  • வடிகுழாய் உட்புகுத்துதல்: சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை வடித்தெடுப்பதற்காக கதீற்றரை, ஒரு வகைமெல்லிய குழாயை உபயோகித்தல்

சிறுநீர்ப்பை சிக்கல்கள் உள்ளபோது CIC உதவக்கூடும்

உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பையினால் சிறுநீரை வெளியேற்ற முடியாமலிருக்கும்போது, சிறுநீர்ப்பையில் சிறுநீர்க் கசிவு ஏற்படும்போது, அல்லது சிறுநீர்ப்பையில் மிக அதிகளவு அழுத்தம் ஏற்படும்போது அவளுக்கு சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுத்தலின் அவசியம் தேவைப்படும். சிறுநீர்ப்பை சரியான முறையில் சிறுநீரை வெளியேற்றாவிட்டால் தொற்றுநோய்கள்,அல்லது வேறு எதாவது பிரச்சினைகள் ஏற்படலாம்.

சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுத்தல் என்பது ஒரு கடினமான செயற்பாடல்ல. உங்கள் பிள்ளை தாதியின் அறிவுரைகளைப் பின்பற்றினால் அவளது சிறுநீர்ப்பைக்குத் தீங்கு செய்யமாட்டாள். சிறிதளவு பயிற்சியுடன், ஏறக்குறைய எல்லாருமே, 5 வயதுப் பிள்ளைகூட இந்தத் நுட்பத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

சிறுநீர்த் தொகுதி எப்படி வேலை செய்கிறது

சிறுநீர், சிறுநீரகத்தினால் உற்பத்தி செய்யப்படுகிறது. அது சிறுநீர்க்குழாய்கள் என்றழைக்கப்படும் குழாய்களினூடாக சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்குள் பாய்கிறது. சிறுநீர்ப்பை என்பது உங்கள் சிறுநீரைக் கொண்டிருக்கக்கூடியவாறு விரிவடையக்கூடிய, தசையினாலான ஒரு பையாகும்.

சிறுநீர்த் தொகுதி (பெண்)சிறுமி ஒருத்தியின் சிறுநீரகம், சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்வழி அமைவிடம்

நீங்கள் கழிவறையை உபயோகிக்கத் தயாராக இருக்கும்வரை, சிறுநீரை சிறுநீர்ப்பையிலிருந்து வெளியேறாதவாறு தடுத்துவைக்கும் சுருக்கு தசை எனப்படும் ஒரு வலிமையான தசை, உங்கள் சிறுநீர்ப்பையின் அடியில் இருக்கிறது.

சுருக்கு தசையை தளர்த்தும்படி மூளை செய்தி அனுப்பும்போது, சிறுநீர் விடுவிக்கப்பட்டு, சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை அகற்றும் குழாய் வழியாக உடலிலிருந்து வெளியேறும். ஏறக்குறைய ஒவ்வொரு 2 மணி நேரங்களுக்கு ஒரு முறை சிறுநீர்ப்பை நிறைந்தவுடன் சிறுநீர்ப்பை மூளைக்கு செய்தி அனுப்பும். அதன்பின்பு மூளை அதை வெறுமையாக்குவதற்குத் தகுந்த சமயமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். முதற் செய்தியிலேயே நீங்கள் சிறுநீர்ப்பையை வெறுமையாக்காவிட்டால், அதன் பின்பு செய்திகள் விரைவாகவும் பலமானதாகவும் கிடைக்கும். முடிவாக, சிறுநீர்ப்பை அளவுக்கதிகமாக நிரம்பும்போது சிறுநீர்ப்பை தானாகவே வெறுமையாக்கத் தொடங்கிவிடும்.

சிறுநீர்ப்பை வெறுமையாக்கப்படாவிட்டால், தொற்றுநோய்கள் அல்லது வேறு எதாவது பிரச்சினைகள் ஏற்படலாம். சிறுநீர்ப்பை வெறுமையாக்கப்படாவிட்டால் சிறுநீர், சிறுநீர்க்குழாய்க்கும் சிறுநீரகத்துக்கும் பின்னோக்கிப் பாயக்கூடும். இது பின்னோக்கி வடிதல் என்றழக்கப்படும். மற்றும் இது சிறுநீரகத் தொற்றுநோய்கள், திசுக்களைக் காயப்படுத்துதல், அல்லது நிரந்தரமான சிறுநீரகச் சிதைவை ஏற்படுத்தலாம். அநேக பிள்ளைகளுக்கு, அவர்களின் சிறுநீர்ப்பையை வெறுமையாக்க, சிறுநீர் பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்க, சிறுநீர்த் தொகுதியிலேற்படும் தொற்றுநோய்கள், மற்றும் தற்செயலாக சிறுநீர் கழித்தல் என்பனவற்றிற்கு, சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுத்தல் ஒரு பரிகாரமாகும்.

சுத்தமான ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்தெடுக்க உங்களுக்குத் தேவைப்படும் பொருட்கள்

  • மெல்லிய குழாய்
  • முகொ அல்லது கே-வை ஜெலி போன்ற உராய்வைக் குறைக்கும் ஜெலி. வசிலின் அல்லது மினேரல் ஒயிலை ஒரு போதும் உபயோகிக்கவேண்டாம்.
  • சோப்பு மற்றும் தண்ணீர்
  • துடைக்கும் துண்டுகள்
  • சுத்தமான, உலர்ந்த துவாய்
  • விரும்பினால், சிறுநீரைச் சேகரிக்கும் கொள்கலன்
  • தேவைப்பட்டால், சிறு முகம்பார்க்கும் கண்ணாடி,
  • வடி குழாயை வைப்பதற்கான ஒரு கொள்கலன் அல்லது பை
  • (கிருமிகளை அழிப்பதற்காக) வினாகிரி அல்லது ஒரு பானையில் தண்ணீர்

சுத்தமான ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்தெடுத்தலைச் செய்வதற்குத் தேவைப்படும் பத்துப் படிகள்

பெண்பிள்ளைகளுக்கு சரியான முறையில், சிறுநீரை சுத்தமான முறையில் வடித்தெடுப்பதற்குத் தேவைப்படும் 10 படிகள் பின்வருமாறு:

  1. தேவையான எல்லாப் பொருட்களையும் ஒருமித்து, நீங்கள் இலகுவாக எடுக்கக்கூடிய இடத்தில் வைக்கவும்.
  2. கடுமையாக முயற்சி செய்யாமல் சிறுநீர் கழிக்கும்படி உங்கள் பிள்ளையைக் கேட்கவும்.
  3. அவளது கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் நன்றாகக் கழுவி உலர வைக்கும்படி சொல்லவும். அவளது கைநகங்களை குட்டையாக வெட்டி சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்யவும்.
  4. உங்கள் பிள்ளை சௌகரியமான நிலையில் இருப்பதை உறுதி செய்யுங்கள். அவள் கழிவறையில் உட்காரலாம் அல்லது கழிவறைக்குக் குறுக்காக ஒரு நாற்காலியில் உட்காரலாம். அத்துடன் அவள் படுத்தபடியும் செய்யலாம். அல்லது ஒரு காலை நாற்காலியில் அல்லது கழிப்பறையின் விளிம்பில் வைக்கலாம்.
  5. சிறுமி ஒருத்தியின் சிறுநீர்வழி வாசல், யோனி வாசல், பெண் குறியின் மேல் இதழ், கீழ் இதழ் மற்றும் குதத்தின் அடையாளப்படுத்தல்
  6. ஒரு கையினால் பிறப்புறுப்பின் உதடுகளைவிரித்துவைத்துக்கொண்டு சோப்பு மற்றும் தண்ணீரினால் முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாகக் கழுவும்படி உங்கள் பிள்ளையிடம் சொல்லவும். பின்பு அலசி உலரவிடவும்.
  7. உராய்வைக் குறைப்பதற்காக வடி குழாயின் நுனியில் முகொ அல்லது கே-வை ஜெலியை பூசுமாறு உங்கள் பிள்ளையைக் கேட்கவும். குழாயின் நுனியின் 5 முதல் 8 செமீ (2 முதல் 3 அங்குலங்கள்) மூடுமாறு முயற்சிக்கவும். வடிகுழாயை ஜெலி ரியூப்பினுள் போட்டுவிடாதீர்கள். உங்கள் பிள்ளை உராய்வு நீக்கிய வடிகுழாயை, ஒரு பென்சிலைப்போல பிடிக்கவேண்டும். வடிகுழாயின் மற்ற முனை ஒரு கோப்பையினுள் அல்லது கழிவறையின் வடியுமாறு விட்டுவிட நிச்சயமாயிருங்கள். சரியான துவாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக, உங்கள் பிள்ளை தன் பெண்குறியைத் தன் விரலால் தடவிப்பார்க்கவேண்டியிருக்கலாம். சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுத்தல் செயற்பாட்டைச் செய்யக் கற்றுக்கொள்ளும்போது வடிகுழாயைப் பெண்ணுறுப்பினுள் தற்செயலாக உட்புகுத்திவிடுவது சாதாரணமானது.
  8. பெண்குறியின் உதடுகள் விரிந்திருக்க உராய்வு நீக்கப்பட்ட வடிகுழாயை சிறுநீர் தாரளமாக வெளியேறும்வரை மெதுவாக சிறுநீர் வடிகுழாய்க்குள் உட்செலுத்தவேண்டும். அதன் பின்பு வடிகுழாயை மேலும் 3 செமீ (ஏறக்குறைய 1 அங்குலம்) வரை மெதுவாக உட்செலுத்தவேண்டும். சுருக்கு தசையில் கொஞ்சம் எதிர்ப்புத்தடை இருக்கலாம். அது சிறுநீர்ப்பைக்குள் ஒரு கதவு போல செயற்படும். உங்கள் பிள்ளை மெதுவாக சுவாசிப்பதும் தன் தசைகளைத் தளர்வாக வைத்துக்கொள்வதும் முக்கியம்.
  9. சிறுநீர் முழுவதையும் கழிவறையில் அல்லது கொள்கலனில் வடிய விடவும்.
  10. சிறுநீர் வடிவது நிறுத்தப்பட்டதும், வடிகுழாயை மெதுவாக அகற்றவும். சிறுநீர் முழுவதுமாக வடிந்து முடியும்வரை தொடர்ந்து வடிந்துகொண்டேயிருக்கும்.
  11. உங்கள் பிள்ளை தன் கால்களுக்கிடையே உள்ள பகுதியை துடைத்து விடவேண்டும் மற்றும் தன் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

நினைவில் வைக்கவேண்டிய வேறு காரியங்கள்

  • எப்போதும் வடிகுழாயைக் கழுவி சரியான முறையில் பாதுகாத்து வைக்கவும். இதை எப்படிச் செய்யலாம் என்பதற்கான அறிவுரைகள் இந்தப் பக்கத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • சிறுநீரின் நிறம், மணம், மற்றும் தெளிவு என்பனவற்றைச் சோதித்துப் பார்க்கவும். இவை தொற்றுநோய் அல்லது வேறு பிரச்சினைகளுக்கு அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரில் மாற்றம் இருந்தால் மருத்துவர் அல்லது தாதியிடம் அதைத் தெரிவிக்கவேண்டும்.
  • எவ்வளவு சிறுநீர் வெளியேறியுள்ளது என்பதைக் குறித்து வைக்கவும். இந்தத் தகவல்கள் உங்கள் பிள்ளைக்குத் தகுதியான, ஒரு ஒழுங்கான அட்டவணையைத் தயாரிப்பதற்கு மருத்துவர் மற்றும் தாதிக்கு உதவியாயிருக்கும்.

சாத்தியமாகக்கூடிய பிரச்சினைகள்

  • வடிகுழாய் உட்செல்லவில்லை. வடிகுழாய் உட்செலுத்தப்படும் சமயத்தில் உங்கள் பிள்ளை தன்னைத் தளர்த்திக்கொள்ளவில்லையென்றால், சிறுநீர்வடிகுழாயின் சுருக்கு தசை, “சிறுநீர்ப்பைக் கதவு” மூடப்படலாம். உங்கள் பிள்ளை தளர்வாக இருக்கும்போதும் அவளால் வடிகுழாயை உட்செலுத்தமுடியவில்லையென்றால், நீங்கள் தாதியை அல்லது மருத்துவரை அழைக்கவேண்டும்.
  • வடிகுழாய் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது. செயற்பாட்டின்போது எப்போதாவது வடிகுழாயைச் சுற்றி சில சிறிய இரத்தத் துளிகள் காணப்படலாம். இது அடிக்கடி சம்பவிக்கவில்லையென்றால், இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், மருத்துவர் அல்லது தாதியிடம் தெரிவிக்கவும்.
  • சிறுநீரில் தொற்றுநோய் இருப்பதுபோல காணப்படுகிறது மற்றும் உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இருக்கிறது. சிறுநீர் கலங்கலாகவும் துர்நாற்றமுள்ளதாகவும் காணப்பட்டால், முடிந்தளவு விரைவாக உங்கள் மருத்துவரை அழைக்கவேண்டும்.
  • சிறுநீரில் தொற்றுநோய் இருப்பதுபோல காணப்படுகிறது; ஆனால் உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இல்லை. சிறுநீர் கலங்கலாகவும் துர்நாற்றமுள்ளதாகவும் இருக்கிறது; ஆனால் உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல் இல்லை. இந்த நிலைமையில் அவள் அதிகளவு நீராகாரம் அருந்தவேண்டும். வடிகுழாயை அவள் சரியாப் பொருத்துகிறாளா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அழைக்கவும்.

சுத்தமான ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்தெடுத்தலை ஒரு நாளைக்கு 4 முதல் 6 முறைகள் வரை செய்யவேண்டும்

உங்கள் பிள்ளையின் தேவைகளைப் பொறுத்து, சுத்தமான ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்தெடுத்தலை ஒரு நாளைக்கு 4 முதல் 6 முறைகள் செய்யும்படி பெரும்பாலான மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். இரவில் 8 மணி நேரத்துக்கு மேலாக உங்கள் பிள்ளை , சுத்தமான ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்தெடுத்தலைச் செய்யாமல் இருக்கக்கூடாது.

உங்கள் பிள்ளைக்குத் தகுதியான வடிகுழாயின் அளவு

உங்கள் பிள்ளையின் மருந்துவர் உங்கள் பிள்ளைக்கு சரியாகப் பொருந்தக்கூடிய வடிகுழாயைத் தருவார்.

வடிகுழாயின் பருமன் ஃபிரெஞ் (FR) என்றழைக்கப்படும் அலகால் அளக்கப்படுகிறது. சுத்தமாக ஒழுங்கான இடைவெளியில் சிறுநீரை வடித்ததெடுக்கும் வடிகுழாயினளவு 5 முதல் 16 FR களுக்கிடைப்பட்டிருக்கும். எண்ணிக்கை குறையும்போது வடிகுழாயின் பருமனும் குறையும்.

தேவைப்பட்டால் வடிகுழாயின் பருமனை மாற்றும்படி மருத்துவர் சிபாரிசு செய்யலாம். உதாரணமாக, சிறுநீர்ப்பையை வெறுமையாக்க அதிக நேரம் தேவைப்பட்டால், உங்கள் பிள்ளை உபயோகிக்கும் வடிகுழாயினளவு மிகவும் மெல்லியதாக இருக்கலாம்.

தெரிந்திருக்கவேண்டிய சில முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளை தானாகவே சரியான நேரத்தில் வடிகுழாய் பொருத்துவதும் அதைப் பொருத்தும்போது அதை நழுவ விடாதிருப்பதும் மிகவும் முக்கியம். காலையிலிருந்து இரவு வரை ஒரு ஒழுங்கான அட்டவணை போட்டு வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
  • வடிகுழாய் கீழே தரையில் விழுந்துவிட்டால், வேறொரு குழாயை உபயோகிக்கவும்.
  • சிறுநீரகத்தினூடாக சிறுநீர் வடிந்து செல்வதற்கு உதவு செய்வதற்காக உங்கள் பிள்ளைக்கு அதிகளவு நீராகாரங்களைக் குடிக்கக் கொடுக்கவும்.

வடி குழாய்களை எப்படி சுத்தம் செய்வது

வடிகுழாயைச் சுத்தமாகவும் கிருமியழிக்கப்பட்டதாகவும் வைத்திருப்பது, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோயுண்டாவதைத் தடுக்கும். கீழே விபரிக்கப்பட்டபடி, உங்கள் வடிகுழாயைச் சுத்தமாக வைத்திருக்க இரண்டு படிகள் இருக்கின்றன: படி 1 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட உபகரணங்களை உபயோகித்தவுடன் ஒவ்வொரு முறையும் செய்யவேண்டியவை. படி 2 கிருமிகளை அழிப்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு முறை செய்யவேண்டியவை. அதாவது, உங்கள் பிள்ளைக்குத் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உதவியாக வடிகுழாயிலுள்ள எந்தக் கிருமியும் அகற்றப்படும். கிருமியழிப்பதற்காக இரண்டு தெரிவுகள் இருக்கின்றன: தண்ணீரில் கொதிக்கவைத்தல், அல்லது வினாகிரியில் ஊறவைத்தல்.

படி 1: வடிகுழாய்களைச் சுத்தம் செய்தல் (உபயோகித்தவுடன்)

  • வடிகுழாயின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் சூடான சோப்பு நீரினால் நன்றாக அலசிக் கழுவவும்.
  • திரவ சோப்புகள் அலல்து டிஷ் சோப்புகள் நன்றாகக் கழுவ உதவும் மற்றும் பாதுகாப்பானவை.
  • வடிகுழாயைக் கழுவ பீச்சாங்குழாயையும் நீங்கள் உபயோகிக்கலாம். பீச்சாங்குழாய் என்பது வேகமாகத் தள்ளும் கருவியுடனுள்ள ஒரு துவாரமுள்ள குழாயாகும்.
  • வடிகுழாயை ஒரு துவாயினால் துடைத்து, அந்நாளின் இறுதியில் கிருமியழித்தல் செய்வதற்காக, “அழுக்கு” என்று விபரச்சீட்டு எழுதி, ஒரு பிளாஸ்ரிக் பையில் போட்டுவைக்கவும்.
  • படி 2 க்குப் போகவும்: தெரிவு 1 அல்லது 2

படி 2: கிருமியழித்தல் (ஒரு நாளுக்கு ஒரு முறை)

வடிகுழாயைக் கொதிக்கவைத்தல் மூலம் கிருமியழித்தல் செய்யவேண்டுமா அல்லது வினாகிரியினால் மாத்திரம் கிருமியழிக்கமுடியுமா என்று தாதி உங்களுக்குச் சொல்லுவார்.

தெரிவு 1: கொதிக்கவைத்தலின்மூலம் கிருமியழித்தல்

  • ஒரு நாளுக்கு ஒரு முறை, கொதிக்கும் நீருள்ள பெரிய பாத்திரத்தினுள் கழுவப்பட்ட எல்லா வடிகுழாய்களையும் 10 நிமிடங்களுக்குப் போட்டுவைக்கவும்.
  • வடிகுழாய்களை வெளியே எடுத்துவிட மறக்கவேண்டாம். இல்லவிட்டால் அவை சேதமடைந்துவிடும்
  • பின்பு வடிகுழாய்களை ஒரு சுத்தமான பேப்பர் டவலில் காற்றில் உலர்ந்துவிடுவதற்காக வைத்துவிடவும். வடிகுழாயின் உட்பகுதியில் ஏதாவது தண்ணீர்த் துளிகளோ அல்லது ஈரத்தன்மையோ இல்லாமலிருப்பது முக்கியம். ஏனென்றால் இது கிருமிகள் வளருவதற்கு நல்ல பிரதேசமாகிவிடும்.
  • வடிகுழாய்களை ஒரு சுத்தமான ஸிப்பினால் பூட்டப்பட்ட பையில் அல்லது கொள்கலனில் வைத்து, பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
  • வடிகுழாய்கள் கடினமானதாக, இறுக்கமாக, உடைந்து, அல்லது சேதமடைந்து போகாதிருந்தால் அவற்றை ஏறக்குறைய ஒரு வாரம் வரை, திரும்பத்திரும்ப சுத்தமாக்கி உபயோகிக்கலாம்.

2: வினாகிரியினால் கிருமியழித்தல்

  • வடிகுழாய்களை சூடான, சோப்புத் தண்ணீரினால் கழுவவும்.
  • இரண்டு முறைகள் நன்கு அலசவும்.
  • அறைவெப்பநிலையிலுள்ள ஒரு பேசின் தண்ணீரில், 250 மிலி(1கப்) வினாகிரிக் கலவையை வைத்து அதனுள் வடிகுழாய்களைப் போட்டு ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
  • வடிகுழாய்களை சுத்தமான தண்ணீரில் அலசவும்.
  • வடிகுழாய்களை ஒரு சுத்தமான பேப்பர் டவலில் வைத்து காற்றில் உலர விடவும். வடிகுழாயின் உட்பகுதியில் ஏதாவது தண்ணீர்த் துளிகளோ அல்லது ஈரத்தன்மையோ இல்லாமலிருப்பது முக்கியம். இந்த ஈரலிப்பான இடங்களில் கிருமிகள் வளரமுடியும்.
  • வடிகுழாய்களை ஒரு சுத்தமான ஸிப்பினால் பூட்டப்பட்ட பையில் அல்லது கொள்கலனில் வைத்து, பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
  • வடிகுழாய்கள் கடினமானதாக, இறுக்கமாக, உடைந்து, அல்லது சேதமடைந்து போகாதிருந்தால் அவற்றை ஏறக்குறைய ஒரு வாரம் வரை, திரும்பத்திரும்ப சுத்தமாக்கி உபயோகிக்கலாம்.
Last updated: நவம்பர் 06 2009